இணையம் மூலம் சட்டவிரோத விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்நாட்டு பந்தய மையங்கள் குறித்து உடனடியாக விரிவான விசாரணையை ஆரம்பிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.
எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி இலங்கையில் இயங்கும் இணையவழி பந்தய வலைத்தளங்கள் எவ்வாறு பகிரங்கமாக தமது விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவை இட்டு அவர் வலியுறுத்துவது என்னவென்றால், இது தற்போதைய சட்ட அமைப்பில் உள்ள ஒரு பெரிய இடைவெளி என்றும், இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய பில்லியன் கணக்கான பாரிய வரி வருவாய் நாட்டிற்கு இழக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட்டப்பட்ட குழு கூட்டத்தில் இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் விரிவாக விசாரித்ததாகத் தெரிவித்த தலைவர், சில இணைய விளம்பரங்களில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் கூட தன்னிச்சையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டதாக வெளிப்படுத்தினார். இத்தகைய பாரதூரமான சூழ்நிலையில் மேலும் மௌனமாக இருக்க முடியாது என்பதால், இந்த பிரச்சினை குறித்து விரைவாக ஆராய்ந்து முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.