
தற்போது நிலவும் கடும் மழை காரணமாக தீவு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், சுகாதார அதிகாரிகள் ஒரு விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தை அறிவித்துள்ளனர். இதன் கீழ், நாளை (18ஆம் திகதி) தீவின் அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட கல்வி நிறுவன வளாகங்களை மையமாக வைத்து விசேட நுளம்பு ஒழிப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனைகளின்படி, நுளம்பு குடம்பிகள் பெருகும் இடங்களில் 41 சதவீதமானவை பாடசாலை வளாகங்களில் இருந்து பதிவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், மத வழிபாட்டுத் தலங்களில் 28 சதவீதமும், தொழிற்சாலைகளில் 26 சதவீதமும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 14 மாவட்டங்களுக்குட்பட்ட 89 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம் மிகவும் தீவிரமான நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டில் சுமார் 42,232 டெங்கு நோயாளர்கள் (மற்றொரு அறிக்கையின்படி 41,925) பதிவாகியுள்ளதோடு, ஜூன் மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 8,390 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 15ஆம் திகதி மட்டும் சுமார் 700 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிப்பதுடன், இந்த ஆண்டு இதுவரை 24 டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மரணமடைந்தவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக சிறப்பு வைத்தியர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டார்.
இந்த முறை மொத்த டெங்கு நோயாளர்களில் 51 சதவீதமானோர், அதாவது 21,451 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 11,000 நோயாளர்கள் அதிகரித்துள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். நோயாளர்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக, தற்போது கொழும்பு பிரதேசத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்புடன் மேலதிகமாக காலி, மாத்தறை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறப்பு வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
வரும் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் இந்த விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தில் பல்வேறு வளாகங்களை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன. 18ஆம் திகதி கல்வி நிறுவனங்களும், 19ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வாரத்தின் இறுதி நாளான ஜூன் 20ஆம் திகதி தனியார் வீடுகளும் அதைச் சுற்றியுள்ள வளாகங்களும் சுத்தம் செய்யப்படவுள்ளன. நோயாளர்கள் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் புகை பரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதுடன், தாம் வாழும் சூழலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
டெங்கு அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சிறப்பு வைத்தியர் பிரசீலா சமரவீர, கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு காய்ச்சல் வந்து 24 மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மற்றவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் தகுதியான வைத்தியர் ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலைக்கோ செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் மேலும் நினைவூட்டுகின்றனர்.