
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை 'ஏ' மற்றும் இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கை 'ஏ' அணியின் விசென் ஹலம்பகே மற்றும் இந்திய 'ஏ' அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஆய்வு செய்த பின்னர், போட்டி நடுவர் ஹலம்பகே மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இரு வீரர்களுக்கும் அவர்களின் போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளதாக நியூஸ்வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிந்த வட்டாரங்கள், சம்பந்தப்பட்ட போட்டி நடுவரின் அறிக்கை மேலதிக நடவடிக்கை மற்றும் பரிசீலனைக்காக இலங்கை மற்றும் இந்தியாவின் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அதிகாரிகளிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்தத் தொடர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நேரடி மேற்பார்வையின் கீழ் நடத்தப்படாததால், விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் மற்றும் தொடரின் அதிகாரிகளிடம் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக இலங்கை 'ஏ' அணி சூப்பர் ஓவரில் பெற்ற பரபரப்பான வெற்றிக்குப் பிறகு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விசென் ஹலம்பகே மற்றும் 15 வயது இந்திய துடுப்பாட்ட வீரர் சூர்யவன்ஷி இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையை காட்டும் வீடியோ காட்சிகளும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
இரு நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த மோதலைக் காட்டும் வீடியோ காட்சிகள் மிக வேகமாகப் பகிரப்பட்டதால், சமூக ஊடகங்களிலும் இது குறித்து தீவிர விவாதம் மற்றும் கவனம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த தண்டனைகள் குறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள், இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது போட்டி அதிகாரிகள் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.