
மெதவச்சிய மற்றும் வவுனியாவை இணைக்கும் A9 பிரதான வீதியில் மஹகும்புகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வீதிப் பகுதியில் கடந்த 24 மணித்தியால குறுகிய காலப்பகுதியில் இரண்டு வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் பூனாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் பஹலகல்கந்தேகம பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய 58 வயதுடைய ஆசிரியை சம்பா சுபசிங்க ஆவார். நேற்று (18) காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியை பிரதான வீதியுடன் இணையும் ஒரு துணை வீதியிலிருந்து தனது ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளை பிரதான வீதிக்குள் செலுத்தியுள்ளார். பின்னர், அவர் தான் ஓட்டி வந்த இடது பாதையிலிருந்து வலதுபுறமாக மோட்டார் சைக்கிளைத் திருப்பி சுமார் 20 மீட்டர் தூரம் முன்னோக்கிச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், அவருக்குப் பின்னால் வவுனியா நோக்கி இடது பாதையில் சென்று கொண்டிருந்த கண்டி - வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பஸ், இந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் பஸ்ஸின் உடல் பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தக் கடுமையான மோதலில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரதி அதிபரின் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற பின்னர், அதனுடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் அதன் சாரதி பூனாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.