கந்தானை பிரதேசத்தில் இருந்து ராகம நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை-மகன் ஜோடி ரயிலில் மோதி உயிரிழந்த சோகமான செய்தி கந்தானை பேலந்த ரயில் கடவையில் இருந்து பதிவாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் பயணித்த அவரது தந்தை ஆபத்தான நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்தில் அகால மரணமடைந்தவர்கள் ராகம, பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய வெலிசரகே கேசான் ஜீவக பெர்னாண்டோ என்ற மகனும், அவரது 48 வயதுடைய தந்தையான வெலிசரகே ரொஷான் குமார பெர்னாண்டோ என்பவருமாவர். உயிரிழந்த தந்தை-மகன் இருவரின் சடலங்களும் தற்போது ராகம போதனா வைத்தியசாலையின் சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் தாரக ருவன் விஜேசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஏ.சி. கணேபொல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.