கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கம்பஹா ஒஸ்மன்' என அழைக்கப்படும் ஒஸ்மன்ட் குணசேகரவை மேலும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.
போதரகம்மா அவர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயங்களை வெளிப்படுத்தினர்.சந்தேகநபரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி சோதனையிடப்பட்டதாகக் கூறிய குற்றப் பிரிவு அதிகாரிகள், அங்கு பல முக்கியமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினர். அவற்றில் 'கெஹெல்பத்தார பத்மே' என்பவருக்காக வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்பும் இருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன், கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் பழைய மற்றும் தற்போதைய வழக்கு விபரங்கள், அவர் பழகிய நெருங்கியவர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய விரிவான ஆவணமும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சந்தேகநபர் ஒஸ்மன்ட் குணசேகர, கனேமுல்ல சஞ்சீவவின் அனைத்து நடவடிக்கைகளையும் மிக நெருக்கமாகவும் விழிப்புடனும் கண்காணித்து வந்துள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும், அந்த வீட்டின் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி தொடர்பாகவும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவரிடம் மேலதிக விசாரணைக்காக 30 நாட்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. இதற்கிடையில், சந்தேகநபர் ஒஸ்மன்ட் குணசேகரவுக்காக ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, கொழும்பு குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கட்சிக்காரரை சந்திக்க தான் சென்றபோது பொலிஸ் அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
எவ்வாறாயினும், சட்டத்தரணி முன்வைத்த அந்த குற்றச்சாட்டை கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பிரதான நீதவான், இந்த தொழில்முறை இடையூறுகள் குறித்து விசாரிப்பதற்காக அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.