
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தியத்தலாவ ரயில் நிலையம் அருகே வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 42 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. பொசன் போயா தின விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். காயமடைந்தவர்களில் 22 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த உடனேயே செயல்பட்ட மீட்புக் குழுவினர் காயமடைந்த அனைவரையும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.WP ND - 8209 என்ற இலக்கமுடைய இந்த தனியார் பேருந்து பொசன் போயா தினத்தன்று மாலை 6.15 மணியளவில் கொழும்பு பேஸ்டியன் மாவத்தை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பதுளை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணியளவில் குருவிட்ட பரடைஸ் பிரதேசத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. பயணிகளால் நிரம்பி வழிந்த பேருந்து அடுத்த நாள் அதிகாலை 1.00 மணியளவில் தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தைக் கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த பேருந்தின் சாரதியான 44 வயதுடைய பிரபாத் வீரசிங்க, இந்த விபத்து தனது கவனக்குறைவால் ஏற்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். தியத்தலாவ ரயில் நிலையம் அருகே உள்ள செங்குத்தான வளைவு கொண்ட சாலையில் பேருந்தைக் கட்டுப்படுத்த பிரேக்குகளைப் பயன்படுத்தியபோது அவை முழுமையாக செயலிழந்துவிட்டன. அதே நேரத்தில் பேருந்தின் கியரும் கழன்று ‘நியூட்ரல்’ நிலைக்கு வந்ததால் வாகனத்தின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. பேருந்தை அருகிலுள்ள ஒரு தடுப்பணையில் மோதி நிறுத்த சாரதி கடுமையாக முயற்சி செய்தபோதிலும், அது தோல்வியடைந்து பேருந்து வீதியை விட்டு விலகி கீழ் உள்ள ரயில் பாதைக்கு கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்தபோது பேருந்தில் இருந்த சுமார் 15 பயணிகள் முன்னால் தூக்கி வீசப்பட்டு தன்மீது விழுந்ததால், சில நிமிடங்கள் சாரதி இருக்கையில் சிக்கிக்கொள்ள நேர்ந்ததாகவும் சாரதி தெரிவித்துள்ளார். பின்னர் தியத்தலாவ பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பெரும் முயற்சி செய்து பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர். விபத்து காரணமாக சாரதியின் இரு கால்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தியத்தலாவ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.