புலத்சிங்கள, ஏகல்ல வீதிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இருமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நடத்தப்பட்டு வந்த ஆடை விற்பனை நிலையத்திற்குள் இருந்து கணவன் மனைவி இருவரின் சடலங்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புலத்சிங்கள பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட சோதனைகளின் போது நேற்று (14) இந்த சடலங்கள் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள், அந்த இடத்தில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த விஜேசிறி தசநாயக்க என்ற 61-62 வயதுடைய ஒருவரும், அவரது இரண்டாவது மனைவி என கூறப்படும் வேரகொட விதானலாகே புஷ்பா ஷிரோமணி என்ற 55 வயதுடைய பெண்ணும் ஆவர். பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உயிரிழந்த மனைவியின் சடலம் துணியால் மூடப்பட்டிருந்ததுடன், அதில் இரத்தக் கறையும் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த வீடும் கடையையும் பல நாட்களாக வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்த நிலையில், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது காணப்பட்ட நிலைமைக்கு அமைய இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்னரே ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்த மர்மமான சம்பவம் ஒரு கொடூரமான கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நடந்ததா என்பது குறித்து இதுவரை ஒரு குறிப்பிட்ட காரணம் கண்டறியப்படவில்லை. அது குறித்த உண்மையான தகவல்களை வெளிக்கொணர்வதற்காக புலத்சிங்கள பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.