முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (SLTPB) தலைவராகப் பணியாற்றிய பஷ்வர குணரத்ன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அரச தரப்பு சாட்சியாக ஆஜராக சம்மதித்துள்ளார். பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் குணரத்ன, 2014 ஆம் ஆண்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பஷ்வர குணரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127வது பிரிவின் கீழ் நீதவானிடம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, அவரை இந்த வழக்கில் அரச தரப்பு சாட்சியாகப் பெயரிடுமாறும், பிணையில் விடுவிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. தற்போது வெளிநாட்டில் உள்ள பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக நீதவான் பசன் அமரசேன பிடியாணை ஒன்றையும் பிறப்பித்தார். மேலும், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச அழைப்பாணைகளை பிறப்பிக்க நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டால், அதற்கான சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
இதன்போது, பஷ்வர குணரத்னவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்பட்ட போதிலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜௌபர், ஜூன் 17 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து டி-சேர்ட்டுகளை அச்சிட்டு அவற்றை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.