இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்துடன், அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 25வது இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த தலைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய நிலந்த பிரேமரத்ன, இராணுவ சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து பொறுப்புகளை நிறைவேற்றிய அனுபவம் வாய்ந்த ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார்.
இலங்கை பீரங்கிப் படையின் உறுப்பினரான அவர், பாடநெறி இலக்கம் 34 இன் கீழ் இராணுவத்தில் இணைந்துள்ளார். மேலும், தனது இராணுவ சேவை காலத்தில் அவர் இராணுவ ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.