
தமது வருமான வரிப் பொறுப்புக்களை வேண்டுமென்றே புறக்கணித்துச் செயற்படும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக தண்டனைச் சட்டங்களின் கீழ் குற்றவியல் வழக்குத் தொடர உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்த சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரங்களும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வலியுறுத்துகிறது.
குறிப்பாக, வருமான வரி நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யத் தவறுதல், உரியவாறு வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை, அத்துடன் நிறுத்திவைக்கும் வரிகள் மற்றும் முற்பண தனிநபர் வருமான வரிகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் இவ்வாறு வழக்குத் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கடுமையான சட்ட நடவடிக்கையை இறுதித் தெரிவாகப் பயன்படுத்த திணைக்களம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய பல சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஒரு தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட அறிவிப்பு வெளியிடப்படும் என்பதுடன், உரிய வரிப் பொறுப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கு 30 நாட்கள் சலுகைக் காலமும் வழங்கப்படவுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது சட்டவிரோதக் குற்றமாக கருதப்பட்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரும்.
இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்படும் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ 4 இலட்சம் ரூபாய்க்கு மேற்படாத அபராதத் தொகையோ, 6 மாதங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையோ அல்லது இரண்டு தண்டனைகளும் விதிப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன. எவ்வாறாயினும், இந்த புதிய திட்டம் ஒத்துழைப்புடன் செயற்படும் வரி செலுத்துவோரைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக வேண்டுமென்றே வரி மோசடி செய்பவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.