
தம்புள்ளை விகாரை சந்திப் பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த விகாரை வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு வாடகை கடைகளில் வசித்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த கொடூர மோதலில் உயிரிழந்தவரின் மனைவியும் பலத்த காயமடைந்து தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை விகாரை சந்திப் பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் தற்காலிகமாக வசித்து வந்த 53 வயதுடைய ஒருவராவார். இந்த கொடூர கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அருகிலுள்ள கடையில் தங்கியிருந்த மற்றுமொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சம்பவம் நடந்த இரவு உயிரிழந்த கணவனுக்கும் காயமடைந்த மனைவிக்கும் இடையே பல மணி நேரம் தொடர்ச்சியாக வாக்குவாதங்களும் சண்டைகளும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்போது அருகிலிருந்த அறையில் இருந்த நபர் வந்து இந்த தம்பதியினரை கடுமையாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், தம்புள்ளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் சுகத் பண்டார விஜேசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். விகாரை சந்திப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வர்த்தக வளாகம் மூடப்பட்ட பின்னர், அதன் உரிமையாளர்கள் அவற்றை வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும், தற்போது அந்த முழு வளாகமும் போதைப்பொருள் பாவனையாளர்களின் முக்கிய மையமாக மாறியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.