
மித்தெனிய, உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பக்கோ சமன்' என்பவரின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் 12ஆம் திகதி பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள் வீட்டின் முன்னால் நின்றிருந்த இந்த பெண்ணை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் படுகாயமடைந்த நிலையில் மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நெதுன்கொட நிர்மல பிரசன்ன அல்லது 'பக்கோ சமன்' என்பவர் இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டு தென் மாகாணம் மற்றும் மித்தெனிய பிரதேசத்தை மையமாக வைத்து ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளை இயக்கி வந்த இவர், 2025 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 'கெஹெல்பத்தார பத்மே', 'தெம்பிலி லஹிரு', 'கமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட குற்றவாளிகள் குழுவுடன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அனுர விதானகமகே அல்லது 'கஜ்ஜா' மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பக்கோ சமனுக்கு எதிராக பிரதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு யூடியூப் நேர்காணல் ஒன்றில் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் தனக்கு இரகசியங்கள் தெரியும் என கஜ்ஜா கூறியது தனக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும், தனது போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டதால் இந்த கொலையை செய்ததாகவும் விசாரணைகளின் போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார். குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கஜ்ஜாவின் மனைவியின் கணக்கிற்கு 3.5 இலட்சம் ரூபாயை வரவு வைத்ததாக குறிப்பிட்ட அவர், பிள்ளைகளை கொலை செய்யும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பில் பக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி கிடைத்ததுடன், அவரது சட்டவிரோத சொத்துக்களை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு சொகுசு பஸ்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டன. அத்துடன், மித்தெனிய வெலிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது மைத்துனரின் வீட்டில் இருந்து மைக்ரோ பிஸ்டல், தோட்டாக்கள் மற்றும் 550 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டதுடன், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவரது மனைவி ஷாதிகா லக்ஷானி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பக்கோ சமன் தற்போது தடுப்புக்காவலில் உள்ள நிலையில், அவரது தாயை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுக்களிடையே நிலவும் தலைமைத்துவ மோதல்கள் அல்லது பழிவாங்கும் சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் என விசாரணைப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.