மியான்மரின் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகிக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவருக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை ஒரு விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவரது உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவிய நிலையில், இந்த சந்திப்பு அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை வழங்கியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி ஆர்னோ டி பெக் என்பவருடன் அவர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், மியான்மர் ஜனாதிபதி அலுவலகம் தனது உத்தியோகபூர்வ டெலிகிராம் அலைவரிசை மூலம் வெளியிட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது குடும்ப உறுப்பினர்களும் லண்டனில் வசிக்கும் அவரது மகன் கிம் ஆரிஸும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு மியான்மர் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்த சந்திப்பு மியான்மரின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்கில் தங்கள் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு உதவியாக இருக்கும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மியான்மர் இராணுவ அரசாங்கத்திற்கும் ஜனநாயக ஆர்வலர்களுக்கும் பல்வேறு இனக்குழுக்களுக்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது, மேலும் சீனாவின் ஆதரவுடன் மியான்மர் இராணுவம் சமீபத்தில் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் இராணுவத் தலைவருமான மின் ஆங் ஹ்லைங்கின் தலைமையிலான அரசாங்கம் இந்த சந்திப்பிற்கான காரணம் அல்லது அதில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எதையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் கைன் கைன் சோ பின்னர் ஒரு செய்தியை வெளியிட்டு, 81 வயதான சூகி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரியுடன் கைகுலுக்கும் மற்றும் இருவரும் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களும் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. சுதந்திரம் இழந்த நபர்களைச் சந்திப்பதற்கான தங்கள் அமைப்பின் நிலையான நடைமுறைகளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடந்ததாகவும், அதில் தனிப்பட்ட முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தாலும், சூகியின் உடல்நிலை குறித்து அவர்கள் எந்த உத்தியோகபூர்வ மதிப்பீட்டையும் வழங்கவில்லை.