ஹொரணை, ரன்பொக்குணகம பிரதேசத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, அந்த வீட்டை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய இருவர் ஹொரணை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 35 வயதுடைய, ரன்பொக்குணகம பிரதேசத்தைச் சேர்ந்த, போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையான இருவர் ஆவர்.
சம்பந்தப்பட்ட பெண் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் இறுதிச் சடங்குகளுக்காக வீட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர், வீட்டில் எவரும் இல்லாத ஒரு தருணத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் இவ்வாறு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு வீட்டில் இருந்த பித்தளைப் பொருட்கள், தையல் இயந்திர பாகங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட இரண்டரை இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பல பொருட்களை திருடிச் செல்ல இவர்கள் முயற்சித்துள்ளனர்.
சம்பவம் குறித்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட ஹொரணை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த திருடப்பட்ட பொருட்களின் தொகுதியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.