தித்வா சூறாவளி ஏற்பட்டபோது வயல்வெளிகளில் குவிந்த மணல் அடுக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவரிடம், அகற்றப்படும் ஒவ்வொரு கன மீட்டர் மணலுக்கும் 500 ரூபாய் வீதம் கப்பம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆரச்சிக்கட்டு பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (02) மாலை ஆரச்சிக்கட்டு பொலிஸாருக்கு இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளியின் போது ஆனவிலுந்தாவ மற்றும் சுருவில ஆகிய குளங்களின் கரைகள் உடைந்ததால் வயல்வெளிகளில் அதிக அளவில் மணல் குவிந்திருந்தது. இவ்வாறு குவிந்த மணலை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் ஆரச்சிக்கட்டு பிரதேச செயலகம் மற்றும் சுருவில விவசாய சங்கத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயல்வெளிகளில் குவிந்திருந்த மணலை அதே வயல்வெளியின் ஒரு பக்கமாக குவிக்கும் பணியில் ஒப்பந்தக்காரர் ஈடுபட்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அகற்றப்படும் ஒரு கன மீட்டர் மணலுக்கு 500 ரூபாய் வீதம் தனக்குத் தேவை என்று அந்த உறுப்பினர் கூறியதாகவும், அதன்படி அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.