பாணந்துறை நீதிமன்றத்தில் குடு சலிந்துவின் கோப்புகளை 'காணாமல் ஆக்கிய' நபர்கள் குறித்து விசாரணைகள்

investigations-into-those-who-disappeared-kudu-salindus-files-from-panadura-court

சலிந்து மல்சித குணரத்ன என்ற 'குடு சலிந்து' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பான கோப்புகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வாக்குமூலம் அளித்தவர்களில் ஏழு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்தார்.




இந்தக் காணாமல் போனமை தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கடந்த 01ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின்படி, நீதிமன்றத்திற்கு 'B' அறிக்கை மூலம் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பாணந்துறை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு காணாமல் போனவை, 'குடு சலிந்து'வின் வழிகாட்டுதலின் கீழ் பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கொலை தொடர்பான வழக்குக் கோப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பான அறிக்கை என்பனவாகும். கடந்த 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு மனு மூலம் குறித்த வழக்கை அழைத்தபோது, அதனுடன் தொடர்புடைய பிரதான கோப்பைக் கண்டுபிடிக்க முடியாததால், ஒரு துணைக்கோப்பைப் பயன்படுத்தி அது 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த இரண்டு வழக்குக் கோப்புகளும் காணாமல் போயுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




வழக்குக் கோப்புகளின் பிரதிகளைப் பெறுவதற்காக அவை அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெரா காட்சிகளும் எதிர்காலத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன.

பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஜயனெத்தி ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், பாணந்துறை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹான் விஸ்வநாத் மற்றும் பாணந்துறை தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லகே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post