'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக காணாமல் போன 203 நபர்களுக்கு மரணப் பதிவுச் சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அனர்த்தத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 02ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,
ஒரு அவசர அனர்த்த நிலை காரணமாக ஒருவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் கடந்தும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறாவிட்டால், அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருவர் காணாமல் போனார் என்பதை சம்பந்தப்பட்ட பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அதற்கான மரணப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் மாவட்ட பிரதிப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காணாமல் போனமை குறித்து எந்தவொரு எதிர்ப்பும் முன்வைக்கப்படாவிட்டால், பிரதேச செயலாளரின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேச பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். இதற்கிடையில், இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 611 பேரில் 126 பேருக்கு மரணப் பதிவுச் சான்றிதழ்களை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
News