துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட துருக்கி விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. துருக்கி விமான சேவையின் TK 733 என்ற இந்த விமானம் நேற்று (16) இரவு 10.00 மணியளவில் தீவிலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அந்த நேரத்தில் விமானத்தில் 202 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் A-330 வகையைச் சேர்ந்த இந்த பெரிய விமானம் புறப்பட்ட பின்னர் அதன் சக்கர அமைப்பு (Landing Gear) சரியாக உள்ளிழுக்கப்படவில்லை என்பதை விமானி அவதானித்துள்ளார். இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தை மீண்டும் தரையிறக்க தீர்மானித்த விமானி, பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக விமானத்தின் எடையைக் குறைக்க மேலதிக எரிபொருளை எரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, சிலாபக் கடற்கரைக்கு மேலே சுமார் 4000 அடி உயரத்திலும், சுமார் 140 நாட்ஸ் வேகத்திலும் விமானத்தை பறக்கவிட்டு, தரையிறங்குவதற்கு அத்தியாவசியமான எரிபொருள் அளவு மட்டுமே எஞ்சும் வரை விமானத்தை வானத்தில் வட்டமிட்டபடி வைத்திருக்க விமானி நடவடிக்கை எடுத்தார்.
இந்த அவசர நிலை குறித்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் பிரிவுகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அத்துடன், எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள நீர்கொழும்பு கடலேரிப் பகுதியிலும் விசேட படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் நிறுவப்பட்டிருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், விமானியின் பெரும் முயற்சியின் பின்னர் இன்று அதிகாலை 12.27 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், இச்சம்பவத்தில் எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
Tags:
Trending