ஜனவரி 1 முதல் 7 நாடுகளுக்கு அமெரிக்கா நுழைய தடை!

entry-into-the-us-from-7-countries-will-be-banned-from-january-1st

 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் 7 நாடுகளைச் சேர்க்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தனிநபர் பரிசோதனை (screening), விசாரணை மற்றும் தகவல் பரிமாற்ற செயல்முறைகளில் உள்ள கடுமையான குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஜனாதிபதி இந்த விரிவாக்கங்களை மேற்கொண்டுள்ளார்.



புதிய உத்தரவின்படி புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இந்த முழுமையான தடைப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளும் இம்முறை முழுமையான பயணத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பலஸ்தீன அதிகாரசபையால் வழங்கப்படும் ஆவணங்களைப் பயன்படுத்தி வரும் நபர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவது இந்த புதிய உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.




இந்த முழுமையான தடைக்கு மேலதிகமாக, மேலும் 15 நாடுகளுக்கு பகுதி நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கையின்படி, வெள்ளை மாளிகை இதுவரை அந்த நாடுகளின் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், 10949 பிரகடனத்தின் கீழ் முன்னர் அடையாளம் காணப்பட்ட ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 உயர் ஆபத்துள்ள நாடுகளின் குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் மாற்றமின்றி தொடரும்.

சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவுடன் கடந்த நவம்பரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்நாட்டை ஸ்திரப்படுத்த உதவுவதாக ட்ரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தாலும், அண்மையில் சிரியாவில் நடந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு சிவில் மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளார். சிரியாவை இந்த தடைப் பட்டியலில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்களாக, விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் அதிக விகிதம், மத்திய அரசின் பலவீனம் மற்றும் கடவுச்சீட்டு வழங்கும் அமைப்புகளில் உள்ள போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை ஆகியவற்றை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.




இருப்பினும், சட்டபூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், தற்போது விசா வைத்திருப்பவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற குறிப்பிட்ட விசா வகையினர் அத்துடன் அமெரிக்க தேசிய நலன்களுக்காக வரும் நபர்களுக்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட இத்தகைய பயணக் கட்டுப்பாடுகள் சட்டபூர்வமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய உரிய விசாரணைக்கு உட்படுத்த முடியாத நபர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post