
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 4,000 ரூபாய்க்கு மேற்படாத சிறப்பு முற்பணம் செலுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்கபண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறப்பு சுற்றறிக்கை, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் இந்த முற்பணக் கொடுப்பனவு செயல்முறை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்,
சம்பந்தப்பட்ட ஆண்டின் பெப்ரவரி மாத இறுதித் திகதியுடன் அந்த கொடுப்பனவு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பொறுப்பான பிரிவுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிவுறுத்தல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளால் பெறப்படும் இந்த முற்பணம் மீள அறவிடப்படும் போது அதற்கு 8 சதவீத வருடாந்த வட்டி வீதம் அறவிடப்படும், சமமான பத்து மாதாந்த தவணைகளில் சம்பந்தப்பட்ட தொகையை சம்பளத்திலிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
News