சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து அரசாங்கத்தில் எந்தவொரு கலந்துரையாடலும் இல்லை.

there-is-no-government-discussion-to-remove-the-attorney-general

தற்போதைய சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.




சட்டமா அதிபரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சட்டமா அதிபரை நீக்குவதற்காக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் சட்டமா அதிபர் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் எழுந்துள்ளதாகவும், சில தரப்பினர் சட்டமா அதிபரை பாதுகாக்க வேண்டும் என வாதிடும் அதேவேளை, வேறு சிலர் அவரை நீக்க வேண்டும் என கருத்து தெரிவிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், நீதி அமைச்சரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சில சமூக ஊடக பதிவுகள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.




எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த கருத்துக்களுக்கும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியதுடன், சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் படைப்புகள் என்றும், அரசாங்கத்திற்கு அதில் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.

மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், நீதி அமைச்சர் அல்லது வேறு எவருக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால், நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எவரும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



குடிமக்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், அரசாங்கம் என்ற வகையில் சட்டமா அதிபரை நீக்கும் செயல்முறை குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post