Update: தாக்குதல் நடத்தி வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்ததாக - டிரம்ப் அறிக்கை

trump-claims-maduro-arrested

வெனிசுலாவுக்கு எதிரான பாரிய தாக்குதலுக்குப் பின்னர், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக ஊடக கணக்கு மூலம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், அமெரிக்க சட்ட அமுலாக்கப் பிரிவுகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மதுரோ கைது செய்யப்பட்ட விதம் அல்லது அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.




நிக்கோலஸ் மதுரோ சர்வதேச போதைப்பொருள் கடத்தலை வழிநடத்துவதாக அமெரிக்கா நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வந்ததுடன், அதனுடன் தொடர்புடைய அவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவலுக்காக 50 மில்லியன் டொலர் பெரும் சன்மானத் தொகையையும் அறிவித்திருந்தது. கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிப்பது, வெனிசுலாவில் மதுரோவுக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஒரு அழுத்தமாக அரசியல் விமர்சகர்களால் விளக்கப்பட்டுள்ளது. மதுரோ இந்த போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தாலும், சமீபத்திய தாக்குதலுடன் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இதற்கிடையில், கராகஸ் தலைநகரின் பல பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்களும் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளதாகவும், நகரம் முழுவதும் கடும் புகைமூட்டம் பரவியுள்ளதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ ஆக்கிரமிப்பை கடுமையாகக் கண்டித்து வெனிசுலா அரசாங்கம் தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது, ஆனால் ஜனாதிபதி கைது செய்யப்பட்டார் என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் தெளிவுபடுத்துவதற்காக புளோரிடாவின் மார்-அ-லாகோ (Mar-a-Lago) வில் விசேட செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் மேலும் அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post