
கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம், வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் வாடகை அடிப்படையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து ஐந்து தாய்லாந்துப் பெண்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் முகாமையாளராகச் செயற்பட்டு மற்ற பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பெண்களின் வயது 28 முதல் 38 வரையானது.கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவர் இரகசிய முகவராகச் செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த விபச்சார விடுதிக்குள் நுழைவதற்கு 10,000 ரூபாய் அறவிடப்படுவதாகவும், ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு மேலும் 10,000 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும், ஒரு வெளிநாட்டவர் சேவையைப் பெற வந்தால் 25,000 ரூபாய் அறவிடப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் செல்லுபடியான வீசா அனுமதிப்பத்திரங்களுடன் நாட்டில் தங்கியிருந்து இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.