களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் கதவை உடைத்து, நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டங்கள், டொபி மற்றும் சாக்லேட் ஆகியவற்றைத் திருடியதாகக் கூறப்படும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை பிரதான நீதவான் மகேஷ் வாகிஷ்ட கடந்த 25ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்தார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஆவர்.
கடந்த 24ஆம் திகதி இரவு, குறித்த உணவகத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து சந்தேகத்திற்குரிய சிறுமிகள் இந்த திருட்டைச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக களுத்துறை, சாரானந்த மாவத்தையில் வசிக்கும் 33 வயதுடைய குலவிட்டகே கங்கா ரஜிதமாலி என்ற குறித்த உணவகத்தை நடத்தும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளை பரிசோதித்த பின்னர் சந்தேகத்திற்குரிய மூன்று சிறுமிகளையும் கைது செய்துள்ளனர். அப்போது அவர்களால் திருடப்பட்ட பொருட்களின் தொகுதியையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க விசாரணை அதிகாரிகள் முடிந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டார். களுத்துறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.