முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்க அம்மையார் இன்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன் ஆஜராக முடியாது என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சம்பந்தமாக தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரித்தானியப் பயணத்தின் போது ஏதேனும் நிதி மோசடி குற்றம் இடம்பெற்றுள்ளதா என விசாரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று குறித்த பிரிவுக்கு சமூகமளிக்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 18ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று அங்கு ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார். மருத்துவ ஆலோசனைப்படி தான் தற்போது வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வருவதால், இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய தனது வீட்டிற்கு வருமாறு மைத்திரி விக்கிரமசிங்க அம்மையார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக உள்நாட்டு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்க தனது மனைவி மற்றும் குழுவினருடன் 2023 செப்டெம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டது, மைத்திரி விக்கிரமசிங்க அம்மையாரின் பட்டமளிப்பு விழாவுக்கான தனிப்பட்ட பயணமாகவே இருந்தது. கௌரவப் பேராசிரியர் பதவி வழங்கப்பட்ட வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இந்த பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதம இணைப்பு அதிகாரி செனரத் திசாநாயக்க, ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சான்ட்ரா பெரேரா,
ஜனாதிபதியின் மருத்துவ அதிகாரி வைத்தியர் டி.எம்.பி.எஸ். விஜயபால, ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பி.எம்.ஏ.என்.எஸ். ஆரியரத்ன, இணைப்பு அதிகாரி ஏ.டி. கோசல பெரேரா, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.என். குருகே மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.டி.ஆர். தெல்கொட ஆகிய 10 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இதற்காக அரசாங்கத்திற்கு 162 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லண்டன் பயணத்திற்கு மேலதிகமாக, 2023 மே மாதம் சிங்கப்பூருக்கான பயணத்தையும் ஜனாதிபதி ரணில் அரச செலவில் தனிப்பட்ட பயணமாக மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பயணத்திலும் மனைவி மைத்திரி கலந்துகொண்டிருந்தார்.