ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் இதுவரை நிறைவேற்று ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, தற்போது பொதுமக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டில் ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானியமாக, ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. அந்த ஆரம்ப திட்டத்திற்கு அப்பால், இலக்கம் 1001 இன் கீழ் இந்த விசேட அறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, இது ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டை மட்டுமே இலக்காகக் கொண்டது.
மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த நாற்பத்திரண்டு வருட காலப்பகுதியில் இந்த அறை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு ஜனாதிபதி அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ற எதிர்பார்ப்புடன், சாதாரண நோயாளிகள் பயன்படுத்த எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்படாமல், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மருத்துவமனையால் இது பராமரிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினத்திலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எந்தவொரு சாதாரண நோயாளிக்கும் இந்த விசேட அறை மூலம் சிகிச்சை பெறும் வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தின் வளங்களையும் அரச சொத்துக்களையும் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டுகிறது.