மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள போர்ச் சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக விமான எல்லைகள் மூடப்பட்டதால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் ஈரானிய, ஈராக்கிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து இந்த நெருக்கடி நிலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 27 அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பிராந்தியம் முழுவதும் கடுமையான போர்ச் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமானப் பயணங்களை நிறுத்தி வைத்துள்ளன. பாகிஸ்தானும் தனது வான்பரப்பை எதிர்வரும் 31ஆம் திகதி வரை பகுதியளவில் மூடுவதற்கு நேற்று (03) தீர்மானித்தது. எதிகாட் மற்றும் கல்ஃப் போன்ற பல முக்கிய விமான சேவைகளும் தங்கள் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்த அவசர நிலை காரணமாக நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, அவர்களின் விசாக்களை எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி 14 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று (03) அறிவித்தது. அனைத்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுற்றுலாப் பொலிஸின் உதவியுடன் முக்கிய சுற்றுலாப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து வெளியேற விரும்பும் சுற்றுலாப் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக சுற்றுலா முகவர்கள் மூலம் ஒரு விசேட தகவல் வலையமைப்பும் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிட உரிமையாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா முகவர்கள் உட்பட அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விமான அட்டவணை மாற்றங்கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறும், விமானப் பயணங்கள் தாமதமாகும் சந்தர்ப்பங்களில் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியேறும்போது நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வாய்ப்பளிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விமான அட்டவணைகளுக்கு இணங்க விருந்தினர்களின் பயணத் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை முறையாக நிர்வகிக்குமாறும் அந்த சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடியை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் வழங்குவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் இரண்டு அவசர தொலைபேசி சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொழி மற்றும் பிற விநியோகத் தேவைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சுற்றுலாத் தகவல் மையத்தின் 1912 என்ற இலக்கத்தின் ஊடாகவும், விமானப் பயண நிலை மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள 1994 என்ற இலக்கத்தின் ஊடாகவும் சேவைகள் வழங்கப்படுகின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளின்படி, கடந்த 28ஆம் திகதி வரை 3173 இஸ்ரேலியர்கள், 260 ஈரானியர்கள், 185 சவுதி அரேபியர்கள், 69 குவைட்டியர்கள், 69 ஓமானிகள் மற்றும் பஹ்ரைன் நாட்டவர்கள் உட்பட பலர் இலங்கைக்குச் சுற்றுலா வந்திருந்தனர்.