சிறைச்சாலை அதிகாரியின் கையை வெட்டிப் பிரித்து, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டது உட்பட பல பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இரு சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் நாலக இலகங்ககோன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள், அழுத்கே சதுர துலாங்க என்ற 22 வயது இளைஞனும், குலப்பு தந்திரிகே டிலான் மதுஷான் என்ற 36 வயதுடைய ஒருவருமாவர்.
இதற்கு முன்னர் இம்மாதம் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர்கள், அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் பணம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களைக் கொள்ளையிட்டுள்ளனர் என்பது அங்கு தெரியவந்தது. அத்துடன், இந்த நபர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து தலா 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள், குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கூரிய கத்திகள் மற்றும் 12,300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி துஷார குணரத்ன, தனது கட்சிக்காரர்கள் சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தத் தாக்குதல்கள் காரணமாக அவர்கள் இருவரினதும் கை கால்கள் முறிந்துள்ளதாகவும், தலையில் பாரதூரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், சந்தேகநபர்களை மலக் கழிவு வாய்க்கால்களில் போட்டு சித்திரவதை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சட்டத்தரணி, இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட பிரதான நீதவான், குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் இருந்து துரித அறிக்கை ஒன்றை கோருமாறு உத்தரவிட்டார். மேலும், சந்தேகநபர்களை உடனடியாக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தி, உரிய மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக அறிவிக்கப்பட்டது. ஹொரணை பொலிஸ் சார்பாக பொலிஸ் சார்ஜன்ட் கீகியனகே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார் அத்துடன், வழக்கு மார்ச் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.