இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் புதிய நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களால் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 24 மின்சார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் கடந்த 09ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) பிற்பகல் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஆணையாளர், தொழிலாளர் பிரதி அமைச்சர் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்கங்கள் இந்த முடிவை எட்டியுள்ளன. இந்த உடன்படிக்கைகளின்படி, நாளை (12) தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கீழ் பணியாற்றிய காலத்தில் தங்களுக்குக் கிடைத்த சலுகைகள் புதிய நிறுவனங்களின் கீழும் அதேபோன்று பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், 40 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடங்கல்கள் பதிவாகின, அத்துடன் அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்புப் பணிகளுக்கும் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டன.
இதற்கிடையில், மின்சாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வராத ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஐ. குமார மற்றும் எலெக்ட்ரிசிட்டி ஜெனரேஷன் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலிய பண்டிதரத்ன ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.
மேலும், எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபாலவும் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, கடமைகளை புறக்கணிப்பது அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் குற்றவியல் வழக்குத் தொடரக்கூடிய ஒரு கடுமையான குற்றம் என்று வலியுறுத்தியிருந்தார். அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், உடனடியாக தங்கள் கடமைகளுக்குத் திரும்புமாறு அவர் ஊழியர்களுக்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, மின் விநியோகத்தை எந்தவித இடையூறும் இன்றி தொடர அனைத்து ஊழியர்களுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புதிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.