கடந்த பெப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலைக்கும் கடற்படைத் தளத்திற்கும் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ஏவுகணை சிதைவுகள், அமெரிக்க குரூஸ் ஏவுகணையின் பாகங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய அரசாங்க ஊடகங்களால் டெலிகிராம் வழியாக வெளியிடப்பட்ட இந்த சிதைவுகளின் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் சிறு குழந்தைகள் உட்பட சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட ஷஜாரா தய்யேபே (Shajarah Tayyebeh) ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இந்த இரும்பு மற்றும் மின்னணு சிதைவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த சிதைவுகள் பாடசாலைத் தாக்குதலுக்குரியவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவற்றில் உள்ள வரிசை எண்கள் மற்றும் பிற அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தால் அதன் ஆயுதங்களை வகைப்படுத்தும் விதத்துடன் சரியாகப் பொருந்துகின்றன. இதில் உள்ள ஒரு பாகத்தில் அமெரிக்க நிறுவனமான 'பால் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்' (தற்போது BAE நிறுவனத்திற்குச் சொந்தமானது) இன் பெயர் மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குரிய பாதுகாப்புத் திணைக்கள ஒப்பந்த எண் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது நவீன டொமஹோக் ஏவுகணைகளின் தகவல் தொடர்பு அமைப்புக்குரிய செயற்கைக்கோள் தரவு இணைப்பு அன்டெனா (SDL ANTENNA) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏவுகணையை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மோட்டாரின் பாகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் 'Made in USA' என அச்சிடப்பட்டு ஓஹியோவில் அமைந்துள்ள 'குளோப் மோட்டார்ஸ்' நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்த நாளில் அமெரிக்க கடற்படைப் போர்க்கப்பல்கள் மூலம் ஈரானை நோக்கி டொமஹோக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் பென்டகனால் வெளியிடப்பட்டிருந்தன, ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்காக கடற்படையால் டொமஹோக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூட்டுப் படைத் தளபதி ஜெனரல் டான் கேன் அண்மையில் உறுதிப்படுத்தினார். மேலும், ஈரானின் அரை உத்தியோகபூர்வ செய்திச் சேவையான மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோவில், இந்த பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தின் மருத்துவக் கட்டிடமொன்றில் ஒரு டொமஹோக் குரூஸ் ஏவுகணை விழுந்த விதம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவித்தார் இந்த பாடசாலை மீதான தாக்குதலை ஈரானே நடத்தியது என்று. ஈரானிடம் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட டொமஹோக் ஏவுகணைகள் இருப்பதாக அவர் ஒரு ஊடக சந்திப்பில் குற்றம் சாட்டினாலும், உண்மையில் ஈரானிடம் எந்த டொமஹோக் ஏவுகணையும் இல்லை. உலகளவில் அமெரிக்காவைத் தவிர, இந்த ஏவுகணைகள் தற்போது பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே உள்ளன, ஒருவேளை ஈரானுக்கு இந்த ஏவுகணை கிடைத்தாலும், அதை ஏவுவதற்கும் அதன் பயணப் பாதையை திட்டமிடுவதற்கும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் அவர்களிடம் இல்லை. ஈரானால் தயாரிக்கப்பட்ட இரண்டு குரூஸ் ஏவுகணை மாதிரிகளும் வெளிப்புற தோற்றத்தில் டொமஹோக் ஏவுகணைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
இந்த புகைப்படங்களில் காணப்படும் சிதைவுகள், இதற்கு முன்னர் யேமன் மற்றும் சிரியாவில் மோதல் நடந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட டொமஹோக் ஏவுகணைப் பாகங்களுடன் மிக நெருங்கிய ஒற்றுமையைக் காட்டுகின்றன. 'பெல்லிங்க்காட்' ஆய்வுக் குழுவுடன் பணிபுரியும் முன்னாள் அமெரிக்க இராணுவ வெடிபொருள் அகற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ட்ரெவர் பால் கூட இந்த பாகங்கள் டொமஹோக் ஏவுகணைக்குரியவை என உறுதிப்படுத்தியுள்ளதுடன், இஸ்ரேல்-அமெரிக்கப் போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் பிற தாக்குதல் தளங்களிலிருந்தும் இதேபோன்ற ஏவுகணை சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.
(நியூயோர்க் டைம்ஸ் தகவல்களின்படி)