
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் லியான் வறுசவிதான நேற்று (11) உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் அறிவிக்கப்பட்டபோது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதி சஷி வீரவன்ச திறந்த நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வழக்கு விசாரணையில் சாட்சியங்களை வழிநடத்துவதற்கு முன்னர், இந்த வழக்கிற்கு தொடர்புடைய சாட்சிகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தரவு அமைப்பை பரிசோதிக்க தங்களுக்கு வாய்ப்பு தேவை என பிரதிவாதி தரப்புக்காக ஆஜரான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர நீதிமன்றத்தில் தெரிவித்தார். சாட்சியங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதி தரப்புக்கு கிடைக்க வேண்டிய அந்த அணுகல் இதுவரை வழங்கப்படாததால், வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட கணினி அமைப்பை பரிசோதிக்க பிரதிவாதிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலைப்பாட்டை அடுத்த வழக்கு தினத்தில் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் இந்த கோரிக்கை தொடர்பான விசாரணைப் பிரிவுகளின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.