
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்துடன் தொடர்புடைய ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை அங்கீகரிப்பது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக அந்த நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இன்று (27) கூடவுள்ளது. நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் இந்த இரட்டை மீளாய்வுகளுக்கு நிறைவேற்றுக்குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன், இலங்கைக்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை கிடைக்கும்.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள புதிய நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதத்தின் முற்பகுதியில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 700 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் சேர்த்து, சர்வதேச நாணய நிதியத்தினால் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.
இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஐந்தாவது மீளாய்வுக்கான ஊழியர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்டியது. இருப்பினும், அதன் பின்னர், அதாவது நவம்பர் மாத இறுதியில், 'தித்வா' சூறாவளி நாட்டை கடுமையாக தாக்கியதால், அந்த ஐந்தாவது மீளாய்வை நிறைவேற்றுக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதை நிதி நிதியம் தற்காலிகமாக தாமதப்படுத்தியது.
சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி வசதி கருவியின் கீழ் 206 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்கவும் அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், தாமதமான ஐந்தாவது மீளாய்வு மற்றும் ஆறாவது மீளாய்வு ஆகியவற்றை ஒரே நேரத்தில் நிறைவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்திய சர்வதேச நாணய நிதியம், அந்த இரண்டு மீளாய்வுகளுக்கும் தொடர்புடைய ஊழியர் மட்ட உடன்பாட்டை கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எட்டியது.