சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் காணி வாங்கிய சம்பவம் தொடர்பான வழக்கிற்காக இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை வாங்குவதற்காக நியாயமான முறையில் சம்பாதித்த விதத்தை வெளிப்படுத்த முடியாத பணத்தைப் பயன்படுத்தினார் என்பது பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாகும்.
இந்த வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதி பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் சுகவீனமுற்றிருப்பதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை விரிவாக பரிசீலித்த நீதவான், பிரதிவாதி தொடர்ந்து நீதிமன்றத்தை தவிர்த்து வருவதாக சுட்டிக்காட்டி, மருத்துவ அறிக்கைகளை நிராகரித்து பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.