அசர்பைஜான் நாட்டில் மறைந்திருந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினால் இந்தியா ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சக்திவாய்ந்த பாதாள உலகக் குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான மனோஜ் சுரங்க லியனகே அல்லது 'பட்டுவத்த சாமர' என்பவரிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் தற்போது நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் இரகசிய ஆவணக் கோப்பு கடத்தல் சம்பவம் தொடர்பான பல தகவல்களை வெளிக்கொணர முடியும் என உயர் பொலிஸ் அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றிய துசித ஹல்லோலுவ மற்றும் சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட ஆகியோர் பயணித்த ஜீப் வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இந்த சந்தேகநபரின் வழிகாட்டலின் பேரில் இடம்பெற்றது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில், பட்டுவத்த சாமர மற்றும் 'கோப்பிகடை' தொலைக்காட்சி நாடக நடிகர் 'அப்புவா'வின் மகன் சமிள ஆகியோர் இணைந்து துபாயில் இருந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளோட்டி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். மனித உயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு சாமர உள்ளிட்ட குழுவினர் தங்களுக்கு அறிவுறுத்தியதாக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ராகம பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இந்த சந்தேகநபர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ, கெஹெல்பத்தற பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த போன்ற சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, அவர் நாட்டில் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் வலையமைப்பையும் பல சட்டவிரோத நடவடிக்கைகளையும் இயக்கியுள்ளார் என்பதை பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது குற்ற வரலாற்றை ஆராயும்போது, 2020 டிசம்பர் 06 அன்று கலால் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப்பொருள் போக்குவரத்து வலையமைப்பு முழுவதையும் துபாயில் இருந்து இவரே இயக்கியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்ததும், அதனுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை இயக்கியதும் இவரது தலையீட்டிலேயே நடந்துள்ளது. மேலும், 2023 டிசம்பர் 31 அன்று கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பின்னணியிலும் இந்த பட்டுவத்த சாமரவே உள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பல பாரிய கொலைகள் மற்றும் சொத்து சேதங்களுடன் நேரடியாக தொடர்புடைய இந்த சந்தேகநபர், 2024 ஜூலை 25 அன்று கிராண்ட்பாஸ் பகுதியிலேயே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒரு பெண் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தின் பிரதான சூத்திரதாரியாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், 2024 டிசம்பர் 13 அன்று கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிய மாவத்த பிரதேசத்தில் வசிக்கும் மற்றொரு பாதாள உலக உறுப்பினரின் வீட்டை சுட்டு சேதப்படுத்த தனது ஆதரவாளர்களை ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பாகவும் இவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.