ஹோமாகம, பிட்டிபன தெற்குப் பிரதேசத்தில் உள்ள வயல்வெளிக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போது இந்த சடலத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மொரந்துடுவ, மஹாலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ வீரர் ஆவார். அவர் தனது உத்தியோகபூர்வ இராணுவ கடமைகளுக்கு அப்பால், மேலதிக வருமானத்தைப் பெறுவதற்காக வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டியை ஓட்டி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த முன்தினம் இரவு வாடகை பயணத்திற்காக தனது முச்சக்கர வண்டியில் புறப்பட்டுச் சென்ற இந்த வீரர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மீகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சடலம் கண்டெடுக்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் அவர் ஓட்டி வந்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், சடலம் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் எனக் கருதி ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.