சந்தையில் விற்பனை செய்யப்படும் அட்டபரிகாரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தரத்தை அறிமுகப்படுத்தவும், நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபையின் கீழ் அவற்றை ஒழுங்குபடுத்தவும் புத்த சாசன சபை தீர்மானித்துள்ளது. பௌத்த மக்களுக்கு ஒழுக்கமான முறையில் அட்டபரிகாரங்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், நுகர்வோர் அதிகாரசபையின் உதவியுடன் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் 'சோளஸ் பிரிகார' தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வடாபத் எனப்படும் விசிறிகளில் மணிகள் பதிப்பது போன்ற பொருத்தமற்ற அம்சங்கள் கொண்ட பூஜை பொருட்களை சந்தையில் இருந்து அகற்றவும் புத்த சாசன சபை தீர்மானித்துள்ளது.
அட்டபரிகாரத்தின் தரத்தை சரிபார்க்க நுகர்வோர் அதிகாரசபை மூலம் எதிர்காலத்தில் சந்தை சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வெற்றிகரமாக்குவதற்காக பிரதேச செயலாளர்கள் மற்றும் பௌத்த விவகார ஒருங்கிணைப்பாளர் போன்ற அதிகாரிகளின் உதவியைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்த சாசன அமைச்சகத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அனைத்து நிகாய பிரிவுகளின் பதிவாளர் சுவாமிமார்களின் பங்கேற்புடன் அண்மையில் நடைபெற்ற புத்த சாசன சபை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிகாயவின் மகா பதிவாளர் வணக்கத்துக்குரிய பெரகம விமலதிஸ்ஸ நாயக்க தேரர் இதை உறுதிப்படுத்தினார்.