பாணந்துறை கடற்கரைக்கு திடீரென அதிக எண்ணிக்கையிலான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால், பொதுமக்கள் அந்த கடல் பகுதியில் குளிப்பதைத் தவிர்க்குமாறு விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இந்த மீன்களின் தொடுதலால் காயமடைந்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சுமார் பத்து பேர் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வாமை மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிடைத்த தகவல்களின்படி, பாணந்துறை கடற்கரை முழுவதும் சுமார் 300 சிறிய அளவிலான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் குளிப்பதற்காக வந்தவர்கள் இந்த மீன்களை அறியாமல் தொட்டதால் இந்த திடீர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.