அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்ததால், அவர் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவின்படி இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 28ஆம் திகதி சிறைச்சாலையின் கழிப்பறைக்குள் துணிக்கட்டிகளால் செய்யப்பட்ட கயிற்றின் உதவியுடன் இந்த கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.
அச்சமயத்தில் செயற்பட்ட ஏனைய கைதிகள் உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்ததோடு, பின்னர் கைதியை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவர் தற்கொலைக்கு முயற்சித்ததற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.