மத்திய கிழக்கு பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் தங்கியிருக்க நேரிட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் தம்மாம் நோக்கிப் பறந்த இந்த இரண்டு விமானங்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வான்வெளியை மீண்டும் திறக்கும் வரை அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள வானில் பாதுகாப்பாகப் பறக்கவிட்டு, பின்னர் இலக்குகளில் தரையிறக்க விமானிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த 14 ஆம் திகதி மாலை 5.10 மணிக்கு குவைத் நோக்கிப் புறப்பட்ட UL 229 விமானமும், அதே நாள் இரவு 6.36 மணிக்கு தம்மாம் நோக்கிப் புறப்பட்ட UL 253 விமானமும் இவ்வாறு சிக்கலை எதிர்கொண்டன. A-321 நியோ வகையைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தை அடைந்தபோது, ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குவைத் மற்றும் சவுதி அரேபியா தங்கள் வான்வெளிகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளன.
வான்வெளி மூடப்பட்ட நேரத்தில் இந்த இரண்டு விமானங்களுக்கும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்புவதற்குப் போதுமான எரிபொருள் இல்லாததால், விமானிகள் மாற்று நடவடிக்கையாக அப்பகுதிக்கு அருகிலுள்ள வானில் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் விமானங்களை இயக்கி தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்பட்ட விமானிகள், அந்த விமான நிலையங்களில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க நடவடிக்கை எடுத்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு தடங்கலுக்குள்ளான இரண்டு விமானங்களும் நேற்று (15) காலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த அமைதியற்ற மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை விமானங்களுக்கு மேலதிகமாக மேலும் பல வெளிநாட்டு விமானங்களும் இலக்குகளில் தரையிறங்க முடியாமல் இவ்வாறு வானில் தங்கியிருக்க நேரிட்டுள்ளமை மேலும் தெரியவந்துள்ளது.