சுங்கக் கட்டளைச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள House of Fashions பிரபல ஆடை விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான பிரியலால் பந்துல பிரீதி ஜயவர்தன என்ற சந்தேகநபர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார மஹாரச்சி நிராகரித்துள்ளார். அதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுங்க அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனை ஆதாரமற்றது எனத் தெரிவித்த நீதவான், முறைப்பாட்டை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தார்.பிரதிவாதி சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாயை தாண்டுவதால், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இங்கு சுட்டிக்காட்டிய நீதவான், பிணை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், முறைப்பாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது விசாரணைக்கு போதுமான வழக்கு இருப்பதால், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 115வது பிரிவின் கீழ் சந்தேகநபரை விடுவிக்குமாறு பிரதிவாதி விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்புக்காக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி ஷனில் குலரத்ன, சந்தேகநபர் சுங்க விசாரணைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்ட பின்னர் மேலும் பல குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் கூறி பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சீன நிறுவனம் ஒன்றின் மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய பணம் அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னவென்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட சீன விநியோகஸ்தருக்கு உள்நாட்டு நிறுவனங்கள் 30 முதலீடு செய்திருந்தாலும் எந்தவொரு பொருளும் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுள்ள பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
பிரதிவாதி தரப்புக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துஹெட்டி மற்றும் சட்டத்தரணி சமிந்த அத்துகோரல ஆகியோர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, முறைப்பாட்டிற்கு எதிராக ஆட்சேபனைகளை சமர்ப்பித்து, தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறும் அல்லது போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் விடுவிக்குமாறும் கோரினர். எவ்வாறாயினும், இரு தரப்பினரின் விடயங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு தனக்கு சட்ட அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்து பிரதிவாதியின் கோரிக்கைகளை நிராகரித்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை ஆகஸ்ட் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.