
இன்று (9) நாடு முழுவதும் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர், மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
அத்துடன், வெள்ளம் போன்ற அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக படகுகள் மற்றும் அனர்த்த மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டு அறையில் அதற்கென ஒரு விசேட பிரிவும் இயங்கி வருகிறது.நாடு முழுவதும் உள்ள 2,723 நிலையங்களில் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 220,366 பேர் சிங்கள மொழி மூலமாகவும், 73,723 பேர் தமிழ் மொழி மூலமாகவும் பதிவு செய்துள்ளனர். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் முதலில் இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும். அது முற்பகல் 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் கிடைக்கும் ஒரு சிறிய இடைவேளையின் பின்னர், முற்பகல் 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை ஒரு மணி நேரம் முதல் வினாத்தாளுக்கு ஒதுக்கப்படும். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சை இலக்கங்கள் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோர்கள் பரீட்சை நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 நிலையங்களில் நடைபெறும் உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். இதில் 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 107,814 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர். பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி அட்டை தொலைந்துபோன விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி உள்ளது.
பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள கையொப்பத்தை முறையாக உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, தபால் அடையாள அட்டை புகைப்படங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபரினூடாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தரினூடாகவும் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த வருடங்களில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததால், அனைத்து பரீட்சை விண்ணப்பதாரர்களும் பரீட்சை விதிமுறைகளுக்கு இணங்க செயற்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து, தங்கள் பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறித்து, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ப்ளூடூத் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் அல்லது குறிப்புகள் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தன. பரீட்சைகள் முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.