
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை மற்றும் ஒரு யுவதி இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கறுப்புப் பட்டி கராத்தே பயிற்றுவிப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் குருவிட்ட மில்லவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பி.
சுமித் பிரியந்த என்ற இந்த சந்தேகநபர், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.வாகனக் கொள்ளைகள், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகள் உட்பட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இவர், கடந்த ஜூன் 8ஆம் திகதி பேனா வடிவிலான வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் கையிருப்பில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பியால் துனுசிங்க தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நிட்டம்புவ ரன்பொக்குணகம பிரதேசத்தில் கைது செய்து நீண்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, 2018 செப்டம்பர் 9ஆம் திகதி கிரிந்திவெல நாரங்கஸ்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய அமரசிறி நிஸ்ஸங்க என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை வல்லைப்பட்டா வர்த்தக தகராறு மற்றும் முறையற்ற உறவு காரணமாகும். சந்தேகநபர் இறந்த அதிகாரியின் மனைவியுடன் கொண்டிருந்த முறையற்ற உறவுக்கு அந்த அதிகாரி தடையாக இருந்ததாலும், அவருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பெறும் நோக்கத்துடனும், பொலிஸார் என நடித்து கிரிந்திவெலவில் உள்ள அவரது தங்குமிடத்திற்குள் புகுந்து கழுத்தில் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
கொலைக்குப் பின்னர் சடலம் மோட்டார் வாகனத்தில் குருவிட்ட மில்லவட்டிய பிரதேசத்தில் உள்ள 11 ஏக்கர் ரப்பர் தோட்டத்தில் நான்கு அடி ஆழமான குழியில் புதைக்கப்பட்ட போதிலும், மூன்று வாரங்களுக்குப் பின்னர் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் உரப் பையில் வைத்து ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவிட்ட நகரில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்திலிருந்து குருவிட்ட ஆற்றில் வீசியதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேகநபரின் வழிகாட்டுதலின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் கடந்த 25ஆம் திகதி இந்த இடங்களை சோதனை செய்தனர்.
இந்த கொலைச் சம்பவம் நடந்த காலத்தில் சந்தேகநபருடன் காதல் உறவு கொண்டிருந்த குருவிட்ட எக்னலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சுனேத்ரா ராஜகருணா என்ற யுவதி, இந்த குற்றத்தின் தகவல்கள் மற்றும் மனைவிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் குறித்து அறிந்திருந்ததால், அவளையும் காணாமல் போகச் செய்ய சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளார். 2019 பெப்ரவரி 2ஆம் திகதி இந்தியாவில் ஷாப்பிங் செல்வதாகக் கூறி அவளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, அங்கு தங்கியிருந்த 'தருண்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் ஒப்படைத்துவிட்டு சந்தேகநபர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர் அவள் காணாமல் போனதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் விஜேகோன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கமகே ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி உப பொலிஸ் பரிசோதகர் பியால் துனுசிங்க, பொலிஸ் சார்ஜன்ட் மகேஷ் (10033), பொலிஸ் கான்ஸ்டபிள்களான லியனகே (51904), விஜேகோன் (104808), சந்தகெலும் (35769), உபயசிங்க (104819), குமார (104757) மற்றும் பெண் பொலிஸ் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.