
அயகம, இந்தொலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வன சேனாசனத்தில் உள்ள பாறையிலிருந்து சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் அயகம, தும்பர, மானான பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 14ஆம் திகதி உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற குறித்த நபர், அந்த வீட்டிற்குச் செல்லவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 'கலே பன்சல' எனப்படும் வன சேனாசனத்திற்குள் நுழையும் இடத்தில் அவரது காலணிகளும் குடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அயகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று (15) குருவிட்ட இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதன்போது சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் இருந்து குறித்த நபரின் சடலத்தைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், நிலப்பரப்பின் கடினத்தன்மை காரணமாக பாதுகாப்புப் படையினரால் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை.
அதன்படி, பள்ளத்தில் இருந்த சடலத்தை மீட்பதற்கான விசேட நடவடிக்கை இன்று (16) இராணுவ கமாண்டோ அதிகாரிகள் மற்றும் இராணுவப் படையினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாறையிலிருந்து கீழே விழுந்த விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.