சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் நதுன் சிந்தக அல்லது 'ஹரக் கட்டா' உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்று கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.
ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தத் தகவல்கள் வெளியாகின.இன்று சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது அல்லது விடுதலை செய்வது தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்ததுடன், திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சட்டரீதியாகத் தனது கைகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்றத்தில் தற்போது செல்லுபடியான குற்றப்பத்திரிகை இல்லாத நிலையில் சந்தேகநபர்களைத் தொடர்ந்து தடுத்து வைக்க சட்டரீதியான அடிப்படை எதுவும் இல்லை என்று பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு வாதிட்டனர். மேலும், நதுன் சிந்தக மற்றும் மிதிகம ருவன் ஆகியோர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலை என்பது சட்டபூர்வமான சிறைச்சாலை அல்ல, கடற்படைக்குச் சொந்தமான ஒரு தடுப்பு வசதி மட்டுமே என்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அப்போது நீதிமன்றத்திடம் விசேட அனுமதி கோரிய நதுன் சிந்தக, தான் வெலிசர கடற்படை முகாமில் கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாகக் கூறினார், அப்போது தனக்கு அருகில் இருந்த ஒரு அதிகாரியை கேமராவை நோக்கி சுட்டிக்காட்டினார். முன்னதாக தங்கல்ல பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் காயத்திற்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை கிடைத்ததாகவும், ஆனால் வெலிசர தடுப்பு முகாமில் அந்த சிகிச்சையைப் பெற வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, சந்தேகநபர்களைச் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்குமாறும் அவர்களுக்குத் தேவையான பொருத்தமான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அரச வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்து சுட்டிக்காட்டியிருந்ததாவது, இந்த பிரதிவாதிகளை பிணையில் விடுவித்தால், அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் பாரிய சிக்கலான நிலைமை ஏற்படலாம் என்பதாகும்.