மாத்தறை புகையிரத நிலையம் அருகே இயங்கி வந்த அழகு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறைப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் பிரிவுக் ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, 2 கிலோ 45 கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மாத்தறை, விலேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி இந்த கடத்தலை நடத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.