மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்தி அமைதியான நிலைக்கு கொண்டு வர பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இதற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலையை விட முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மகர சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது என அவதானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான முடிவுகளின் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவின் ஒவ்வொரு சிறைச்சாலையிலும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், அதற்கு எதிரான எதிர்ப்பு இத்தகைய சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது என்றும், இது குறித்த உறுதியான தகவல்கள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த சொத்துக்களை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் கைதிகள் மீண்டும் அவர்களது அறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டு, சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் வழமை போல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதில் ஒரு கைதி உயிரிழந்தது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.