
வத்தளை பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்று கொண்டிருந்த சந்தேகநபர்களை வீதித் தடையை கடந்து செல்ல அனுமதித்ததாகக் கூறப்படும் பமுணுகம பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். தியலத்துற பொலிஸ் வீதித் தடையில் சரியாக கடமையாற்றாத குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதாள உலகத் தலைவரின் மூன்று வயது மகளின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அந்த விழாவில் புகுந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
கொலையைச் செய்த துப்பாக்கிதாரி கறுப்பு நிற மோட்டார் காரில் தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்ததும், அது குறித்து அவதானமாக இருக்குமாறு தியலத்துற வீதித் தடையில் இருந்த அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், அந்த வீதித் தடையில் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய குறித்த சார்ஜன்ட், மற்ற அதிகாரிகளை சரியாக வழிநடத்தாமல், அர்ப்பணிப்புடன் கடமையாற்றாமல், சந்தேகநபர்களையும் மோட்டார் காரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்த காரை தப்பிச் செல்ல அனுமதித்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் (1) குறித்த பொலிஸ் சார்ஜன்ட்டை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மேதவத்தவின் மேற்பார்வையிலும், மேல் மாகாண வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி காலிங்க ஜயசிங்கவின் அறிவுறுத்தலின் பேரிலும், நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி. மல் பெரேராவின் வழிகாட்டலின் பேரிலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.