
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேசானி குணரத்ன, புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான அவர், விபத்துக்குப் பிறகு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக தணமல்விலவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர் தவறுதலாக விழுந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த தேசானி குணரத்னவின் கணவரும், முன்னாள் தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சருமான ஜகத் புஷ்பகுமார, கடந்த காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் சுமத்தப்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, அவரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவரது வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவையும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கினார்.
தேர்தல் அரசாங்கத் திட்டங்களின் விளம்பரங்களுக்கு அழுத்தம் கொடுத்து 2,665,000 ரூபாவை செலவு செய்ய வைத்தல், வெள்ள நிவாரண உதவிகளை மோசடி செய்து மக்களுக்கு விநியோகிக்காமல் இருத்தல், மே தினக் கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு தோட்ட நிறுவனங்களிடமிருந்து 4,000 டி-ஷர்ட்கள் மற்றும் 3,000 சேலைகளைப் பெற அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அமைச்சர் பிணையில் உள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
