தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் மாணவர்களுக்கு விடுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்று நிர்வாகம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாகத் திரும்பிச் செல்ல முடியாத மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னர் பல்கலைக்கழக விடுதிகளிலேயே தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், "சரசாவி மேதுர" விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்றும், எந்தவொரு மாணவரையும் விடுதிகளிலிருந்து வெளியேற நிர்வாகம் கட்டாயப்படுத்தாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள தனியார் தங்குமிடங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் தேவைப்பட்டால், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்கும், அது தொடர்பான தேவையான பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பராமரிப்பதற்கும் விடுதி பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.